ஆதி மனிதன்


thanks to http://mukkulam.ace.st/t19-topic

ஆதி மனிதன்

Post  Admin on Tue Jul 06, 2010 3:11 pm
உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே. உலக மரபணு ஆய்வாளர்கள்
ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் கூடி, இந்த ஆராய்ச்சி முடிவை அறிவிக்கத்
தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டியை நேரில்
சந்திப்பதற்காக, மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சோதி மாணிக்கம்
என்ற கிராமத்திற்குச் சென்றோம்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் சோதி மாணிக்கம். ஓட்டு
வீடுகளும் கூரை வீடுகளும் நிறைந்த செம்மண்பூமி வீட்டருகே தோட்டத்தில்
இளநீர் வெட்டிக்கொண்டிருந்தார் விருமாண்டி.
"இந்த 7 ஆண்டாக நானும் என் குடும்பமும் சந்திச்ச அவமானங்களுக்கும்
கேலிக்கும் கிண்டலுக்கும் இப்பதான் விடிவு கிடைச்சிருக்கு" மனம் திறந்து
பேசத் துவங்கிய விருமாண்டி. நமக்கும் ஓர் இளநீரைக் கண் திறந்து
நீட்டினார். "முதல்ல இதைக் குடிங்க அப்புறம் பேசலாம்" என்றவர் தன் தந்தை
ஆண்டித்தேவரையும் தாய் அமராவதியையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். மனித
குல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த மதுரைக் காமராசர்
பல்கலைக்கழகப் பேராசிரியர் பிச்சையப்பன் குழுவினர் 1996ஆம் ஆண்டில்,
உசிலம்பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.
"மற்ற மாணவர்களைப் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடுதான்
நானும் குருதி கொடுத்தேன். 5 ஆண்டு கழிச்சுதான் முடிவு வந்திச்சு. எம்
130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல்
மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும்
புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக்கள் எல்லாரும் நம்ம
விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி
ஆப்பிரிக்காகாரனுக்குப் பிறந்தவனாம் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச
ஆரம்பிச்சாங்க" நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப்
பார்த்தார் விருமாண்டி.
விரல்களால் வகிடெடுத்து வாரி முடித்த கொண்டை, கல் பதித்த இரட்டை
மூக்குத்தி. வரப்பில் உட்கார்ந்தபடி பேசத் தொடங்கினார் விரமாண்டியின்
தாய் அமராவதி. "நான் பெத்த மகன் உடம்புல அவன் அப்பன் ரத்தம் தானே ஓடணும்.
அவன் பாட்டன்... முப்பாட்டன் ரத்தம் தானே ஓடணும்... ஒரு பிறமலை
கள்ளனுக்குத் தான் நான் புள்ளைப் பெத்தேன். ஆனா ஊர்ல இருக்கிற பலபேரும்
என் காதில படுற மாதிரி டேய் கொரங்குக்குப் புள்ளைப் பெத்தவ போறாடா.
ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு புள்ளைப் பெத்தவ போறாடானு பேசுனாங்க. எப்பிடி
இருக்கும் இந்தக் கள்ளச்சி மனசு? என்ன பாடு பட்டிருப்பேன்... யாரு
பேச்சையும் நம்பிறாதீய. அந்த பதினெட்டாம்படியான் மேல சத்தியம் பண்ணிச்
சொல்றேன். உங்களுக்குப் பொறந்த மகன் தான் விருமாண்டி. அப்பிடீன்னு
எம்புருஷன்கிட்ட எத்தனை நாள் சண்டை போட்டிருப்பேன்... அப்பாடா... இப்ப
அந்த அமெரிக்க விஞ்ஞானி வந்து சொன்ன பிறகுதான் நானும் என் குடும்பமும்
தலைநிமிர்ந்து நடக்கிறோம்" விருமாண்டியின் தாய் அமராவதியின் முகத்தில்
இப்போது பெருமிதம் மின்னுகிறது.
"என்னய்யா நீங்க ஒண்ணம் பேசாம இருக்கீங்களே?" விருமாண்டியின் தந்தை
ஆண்டித் தேவரின் முகத்தைப் பார்த்தோம்.
"மத்தவுக விமர்சனம் நாலஞ்சு வருஷமா எங்களை பெரும்பாடு படுத்திப்பிடுச்சு.
புயலுக்கு பிறகு அமைதிங்கிற மாதிரி இப்ப ரொம்ப பூரிப்பா இருக்கோம். என்
மகன் விருமாண்டியால எனக்கு இப்ப எவ்வளவு பெருமை? ஊர் தெரியாத, பெயர்
தெரியாத, மொழி தெரியாத பிற நாட்டானெல்லாம் கேமராவை தூக்கிட்டு வந்து
பேட்டி எடுக்கிறான். வெள்ளைக்காரர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் குழுவாக
வந்து என் வீட்ல 10 நாள் தங்கியிருந்து ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிட்டு,
உலகத்தின் முதல் மனித வம்சம் உங்க குடும்பம். அதுக்காக
பெருமைப்படுங்கய்யானு சொல்லிட்டுப் போனார். உண்மையில் எனக்குப்
பெருமைதான்யா உலகில் தோன்றிய முதல் மனித இனம் தமிழினம். முதல் குடும்பம்
எங்க குடும்பம்ங்கிறது பெருமைதானே" இடுப்பில் வேட்டியும் தோளில்
துண்டுமாக வியர்வை வடிய நின்ற ஆண்டித்தேவரின் கம்பீரமான முகத்தில்
மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.
1996இல் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் மரபணு மற்றும் காசநோய் ஆய்வை
மேற்கொண்ட மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மரமணுப்
பிச்சையப்பன், உசிலம்பட்டி மாணவர் விருமாண்டியின் உடலில் தொன்மையான
எம்.130 என்ற மரபணு இருப்பதை மதுரைப் பல்கலைக்கழக வலைப்புலத்தில்
வெளியிட்டார். ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மனித இனத்தின் மரபணு
ஆராய்ச்சியில் தீவிர மாயிருந்த ஸ்பென்சர் வெல்சு இந்த வலைப்புல முடிவைப்
பார்த்ததும் உற்சாகம் கொண்டார். முதல் மனிதன் ஆப்பரிக்காவில் தான்
தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
ஆப்பிரிக்க மனித இனத்தின் மரபணு உசிலம்பட்டியில் ஒரு தமிழனுக்கு
இருப்பதைக் கண்ட டாக்டர் ஸ்பென்சர் வெல்சு, உடனே புறப்பட்டுத் தமிழகம்
வந்தார். "உசிலம்பட்டிப் பகுதியில் பல கிராமங்களிலும் எங்களோடு சேர்ந்து
ஆராய்ச்சி மேற்கொண்டார். சோதிமாணிக்கம் கிராமத்தில் 15 குடும்பங்களில்
ஆய்வுசெய்தோம். எல்லாரும் விருமாண்டியின் சொந்தக்காரார்கள்தான். அவர்கள்
உடம்பிலும் ஆப்பிரிக்க ஆதிமனிதனின் உடம்பிலுள்ள எம் 130 வகை மரபணு.
விருமாண்டி உடம்பிலும் உறவினர்கள் உடம்பிலும் உள்ள மரபணுபின் மூலம் முதல்
மனித இனம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் இன்னும்
நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பது உறுதியாகி விட்டது" என்கிறார் மரபணுப்
பேராசிரியர் பிச்சையப்பன். பேராசிரியர் பிச்சையப்பன் தனது ஆராய்ச்சியை
தொடர்வதற்காகச் சுமார் 6 கோடி ரூபாய் நிதியை டாக்டர் ஸ்பென்சர் வெல்சு
அளித்திருக்கிறார்.
வரும் சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்
நடக்கவிருக்கும், உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின்
முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் சோதிமாணிக்கம் என்ற
கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அறிவிக்க
இருக்கிறார்கள்.
மனிதன் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி
தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று
உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
நக்கீரன் 23.04.2008
நன்றி: தமிழ்த்தோட்டம் (மின்பதிப்பு)
(இச்சேதியின் அறிவியல் வடிவம் என் பல்கலைக்கழக சகாக்கள் மூலம் எனக்கு
முன்பே தெரிந்தாலும். இதைத் தமிழர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதை
இச்சேதியின் மூலம் அறிந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. இது பற்றி மேலும்
பேசுவோம்)
http://groups.google.pl/group/minTamil/msg/0c4453d38e3c524e
Back to top

No comments: