பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al

thanks to 
http://thoughtsintamil.blogspot.com/2006/09/et-al.html

பத்ரி சேஷாத்ரி

Sunday, September 03, 2006

பாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களில் இங்கு தலித்களால் தலைவர் பதவியை ஏற்க முடிந்ததில்லை. (நாட்டார்மங்கலத்தில் முதல் ஐந்து வருடங்கள் 1996-2001 ஒரு தலித் பஞ்சாயத் தலைவர் இருந்தார். அடுத்த ஐந்து வருடங்கள் இங்கும் மற்ற மூன்று இடங்களைப் போலவே நடந்துள்ளது.)

இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்கள் (முக்கியமாக பள்ளர்கள்?) 10%-க்கும் குறைவானவர்கள். பெரும்பான்மை மக்கள் முக்குலத்தோர் சாதியான கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் அனைவருமே கள்ளர் இனத்தோரின் வயல்களில் வேலை செய்பவர்களாகவும் ஜீவிதத்துக்கு கள்ளர்களை நம்பி இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1996 முதற்கொண்டு இந்த கிராமங்களில் நடக்கும் தேர்தல், இடைத் தேர்தல்களின்போது

1. போட்டியிட விரும்பும் தலித்கள் மிரட்டப்பட்டுள்ளனர், தடுக்கப்பட்டுள்ளனர்.
2. கள்ளர்களிடம் வேலை செய்யும் தலித்கள் போட்டியில் இறக்கிவிடப்பட்டு ஜெயித்த ஒரு நாளைக்குள்ளாக பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
3. மர்மமான முறையில் போட்டியில் நின்ற ஒரு தலித் இறந்துள்ளார். (நரசிங்கம்)
4. அநியாயத்தை எதிர்க்கக்கூடிய சில தலித் குடும்பங்கள் கிராமத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் தலித்களுக்கு எப்படி பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒதுக்கிவைக்கலாம் என்று இங்குள்ள கள்ளர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். மேலும் பஞ்சாயத்து தலைவர்தான் ஊர்க்கோயில் அறங்காவலராகவும் இருக்கவேண்டும் என்ற ஓர் ஐதீகம் இருப்பதால் ஒரு தலித் கோயில் அறங்காவலராக இருப்பது 'தெய்வ குற்றம்' ஆகும் என்ற அபத்தமான கருத்தையும் ஊர் மக்கள் வலியுறுத்துகிறார்களாம்.

அரசியல்ரீதியாக இந்த நான்கு கிராமங்களிலும் இட ஒதுக்கீட்டை மாற்ற அரசு முயற்சி செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்குவோம் என்று சொல்ல, இந்த நான்கு கிராமங்களிலும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று அரசு சென்ற வாரம் அறிவித்தது.

ஆனால் இன்னமும் பல அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பிரச்னையில் எவ்வாறு ஈடுபடுவது என்று புரியவில்லை. இந்த கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் கள்ளர்கள் என்பதால் இங்கு ஆதரவு பார்வர்ட் பிளாக், அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்குத்தான். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியோருக்கு ஆதரவு மிகக்குறைவு.

பார்வர்ட் பிளாக் தமிழகத்தைப் பொருத்தவரை முக்குலத்தோர் ஜாதிக்கட்சி. எனவே அவர்கள் தலித் ஆதரவு நிலையை எடுக்க மாட்டார்கள். திமுக, அஇஅதிமுக ஆகியவை சென்னையில் ஒருமாதிரியும் மதுரை மாவட்டத்தில் வேறுமாதிரியுமான நிலையைத்தான் எடுக்க முனைவார்கள்.

எனவே சென்ற சில வருடங்களில் நிகழ்ந்த கோமாளிக்கூத்தே வரும் வருடங்களிலும் தொடரும்.

இதனை ஒரேயடியாக மாற்ற முடியாது; இது கள்ளர் சாதியினர் மனம் சம்பந்தப்பட்டது என்றாலும் அரசு சிலவற்றைச் செய்யலாம்.

1. பஞ்சாயத்துக்கு சரியான தேர்தல் நடந்து தலித் ஒருவர் தொடர்ந்து தலைவராக இல்லாவிட்டால் இந்த கிராமங்களில் எந்தவிதமான வசதிகளையும் அரசு செய்து கொடுக்காது. ஏற்கெனவே கொடுத்துவந்த வசதிகளை அரசு நிறுத்திவிடும்.

தண்ணீர் வசதிகள் கொடுக்கப்பட்ட மாட்டாது. ரேஷன் கடைகளில் நியாய விலைப் பொருள்கள் கிடைக்காது. அரசுப் பேருந்துகள் இந்தப் பக்கம் வரமாட்டா. வேளாண்மைக்கு அரசு இலவச மின்சாரம் கொடுக்காது. விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது.

மொத்தத்தில்
economic embargo.

இந்தக் கஷ்டங்களிலிருந்து தலித்கள் தப்பிக்க அரசு அவர்களுக்கு மாதாமாதம் வாழ்வுக்குத் தேவையான உதவித்தொகை வழங்கும். அரசு இந்த கிராமங்களில் சிறப்புக் காவல்நிலையங்களை ஏற்படுத்தி, அதற்கு வெளி நகரங்களிலிருந்து காவலர்களை நியமித்து தலித்கள்மீது தாக்குதல் நடைபெறாவண்ணம் காப்பாற்றும்.

2. இந்த நான்கு பஞ்சாயத்துகளில் ஏதாவது ஒன்று தலித் ஒருவரை தலைவராகக் கொண்டு நடக்க ஏற்றுக்கொண்டால், அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகமான அளவு வசதிகள் செய்துதரப்படும். சாதாரணமாக ஒதுக்கப்படும் நிதி அளவு இரட்டிப்பாக்கப்படும். இங்கு வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் அரசு வேலைகளில் முன்னுரிமை முதற்கொண்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இது வலிந்து செய்யப்படும் social re-engineering. ஆனால் இதைச் செய்யாமல் சென்னையில் கொடிபிடித்துப் போராடினால் யாருக்கும் பயன் கிடையாது. 'ஏதோ, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துவிட்டோம்' என்று கட்சிகள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டு விழா எடுக்க மட்டுமே இந்த அடையாளப் போராட்டங்கள் உதவும்.

27 ஆகஸ்ட் 2006: Pappapatti, Keeripatti to stay reserved
29 ஆகஸ்ட் 2006: Parties welcome Government move

 













No comments: