இந்திய சூழலில் சாதிகள்

thanks to http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_26.html


இப்போது வலைதளமும், இணையமும் நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.. கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தற்போது இலங்கை கடற்படையினரால் சாகடிக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழக மீனவர்களின் உரிமை குறித்து குரல் எழுப்புகின்றனர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், இந்திய வெளியுறவுத்துறை அதன் கொள்கை போன்றவற்றை அந்தப்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்.  வேறொரு சமயத்தில் விலாவாரியாக பேசுவோம்.  ஆனால் மண்டபம் முதல் பாண்டிச்சேரி எல்லை வரைக்கும் இருக்கும் மீனவர்களுக்காக ஒரு கூட்டமைப்பு இருக்குமே?  அவர்கள் எனன ஆனார்கள்? இதற்காகத் தானே சீமான் குரல் எழுப்பினார்?  வேகமாக இந்திய இறையாண்மைச் சட்டம் பாய்ந்ததே?  குறைந்தபட்சம் மீனவர்கள் கூட இது குறித்து வாய்திறப்பார் யாருமில்லை. காரணம் என்ன?
சீமான் சொல்வது போல தமிழர்கள் கட்சித் தமிழனாக சாதி தமிழனாக பிரிந்து இருக்கும் வரையிலும் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.  சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள். நாமும் டவிட்டர்களில் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்,  இதே மீனவ சமூகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் அதிலும் உட்பிரிவுகள் என்று தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்க எப்படி இவர்களால் ஒன்று சேரமுடியும்.?

ஈழத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு நாலாவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கையர்கண்ணி, திருமலையிடம் ஈழ புலனாய்வு அதிகாரிகள் எப்படி கொக்கரித்தார்கள் தெரியுமா?  " உங்க சீமானால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியாவது ஜெயித்து வரமுடியுமா?" என்றார்களாம். நம்மைப் பற்றி தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.  இப்போது ஈழத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பலமடங்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். ..

நாம் இப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களைப் பற்றி பேசினாலும் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரைக்கும் உள்ள இந்த ஜாதிகளைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும்.  இதுவே தான் இன்று வரையிலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு உதவியாய் இருக்கிறது.  சக மனிதனுடன் சேர்ந்து வாழ முடியாமல் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம், குரோதம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுடன் பிளவுபட்டு நிற்க நம் முதுகின் மேல் எவர் வேண்டுமானலும் குதிரை ஏறத்தானே செய்வார்கள்.

மீனவ சமூகம் என்றாலும் அதிலும் பல பிரிவுகள் உண்டு. இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு. பள்ளர் என்றால் பறையரை பிடிக்காது. இவர்கள் இருவருக்கும் அருந்ததியரை பிடிக்காது. ஆனால் தொடக்கத்தில் மரமேறி அல்லது சாணார் என்று அழைக்கப்பட்டவர்களின் இன்றைய நிலைமை ஆச்சரியப்படக்கூடியதே. இன்று நாடார் என்று அழைக்கப்பட்டு பொருளாதாரரீதியாக முன்னேறி இன்று சமூகத்தில் சரிசமமாக உயர்ந்து உள்ளனர். அதுவும் ஜாதிக் கலவரத்திற்கு பெயர் போன இந்த இராமநாதபுரம் மாவட்டம் தான் இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு வழிகாட்டி. உங்கள் வயது நாற்பதுக்குள் இருந்தால் முதுகுளத்தூர் கலவரம், உஞ்சனை கலவரம் போன்றவற்றை கேட்டு இருக்கக்கூடும். குறைந்தபட்சம் அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.

இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து "சாதிவாரியாக பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு" என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு.  அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக் வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள்.

பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்த சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம்.  நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு?


தொடக்கத்தில் இந்த சாதியை தெய்வீகமானது என்பதாக பரப்பப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட அயோக்கித்தனம்.   ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  இந்தோ ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்கு கொண்டு வரப்பட்டது.  இந்த கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களை சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள்.  இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்கு பின்னால் வந்த ஒன்றாகும்.

இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?

மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது.  இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாக கொண்டு வரப்பட்டது.  குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது.  தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம்.  இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாக பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள்.  இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள்..

நாம் பள்ளிக்கூட பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றி சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம்.

ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றி பேசுவது

யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றை செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது.

சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள்

அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றை பேசுவது.

இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காக பிரிகின்றது.

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்க பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள்.  பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து  தோன்றியவர்கள் பஞ்சமர்கள்.

இந்த பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விட தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமிப் போல பல்கி பெருகிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள்.  ஆனால் இந்த பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா?

பிராமணன் என்றால் நீ எந்த பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா?

இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது.  கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள்.  அந்த பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூட தனித்தனியாக பிரிகின்றது.

இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி.  பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி.  ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி.  அந்த சாதியில் பிறந்தவன் அடுத்த சாதி மக்களை திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள்.  அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம்.

இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்கு தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம்.

" உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்."

இப்போது புரியுமே?

இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூக சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது.

இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்கு பல விதங்களிலும் உதவி செய்தது.

No comments: