கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம் --வே.சபாநாயகம்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.




இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.




தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.



முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.



இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

http://ninaivu.blogspot.com/2010/01/blog-post_31.html

No comments: