கீழக் குயில்குடி

கீழக் குயில்குடி

ஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும் 1876 ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப் பட்டது. பின்னர் 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கீழக் குயில்குடி என்ற அந்தச் சிற்றூர் மதுரையின் வடகீழ்திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது. அதிகமாக பிரான்மலைக் கள்ளர் இனத்தவர்கள் வாழும் இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். எந்த்க் குற்றச் செயல் நடந்தாலும் இந்தக் கீழக்குயில் குடி மக்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பெற்றோரிடமிருந்த் பிரித்தெடுக்கப் பட்டனர். குழந்தைகளுக்குக்கான கட்டாயப் பாடசாலை பிரசன்னம், அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காகவல்ல, மாறாக கண்காணிப்புக்கு மிக உகந்ததாக இருந்தது. கணக்கெடுப்புக்கு மிக உதவியளித்தது.அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்து தம்மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிழம்பி மரணித்தவர்களை, தமது முன்னோர்களின் அவ்வகை எதிர்க்கும் பண்பினை இன்றும் கீழக்குடி மக்கள் நினைவு கூருகின்றனர். அவர்களது பெயர்களை மனங்களில் வைத்துப் பூசிக்கின்றனர். திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் புகுந்து வெற்றிகரமாகத் திருடிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற இறுமாப்பு அவர்களிடம் இன்றும் உண்டு


திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறைத் திருட்டு ஒரு பெரிய அத்தியாயம் அதை நான் பின் எப்போதாவது எழுதலாம். ஆதி மதுரையின் முக்கிய காவல் துறையாகச் செயற்பட்ட இந்த மக்கள் காலனித்துவ ஆட்சியில் அந்தப் பரம்பரைப் பணி அற்றுப் போனது. அதனால் எழுந்த சமூகப் பிரச்சினைகள் பலகாலம் தொடந்தது சமுகவியல் வரலாறு. பலத்த காவலுக்கு மத்தியிலும் ஒரு சவாலுக்காக திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் திருடுவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்பதையே நிரூபணமாக்க முயன்றதன் விழைவுதான் இத் திருட்டு. திருடியவனைப் பிடிக்க முடியவில்லை. பகிரங்க மன்னிப்பு வழங்கப்படும், சரணடையுமாறு அறிவித்து, அதனால் சரணடைந்தவனை பின்னர் சிரச்சேதம் செய்தனராம். அந்தமான் தீவுக்குக் கடத்தப் பட்டுச் சிறைவைக்கப் பட்டபோதும் தப்பி வந்த கிழவர் இன்றும் உயிருடன் அங்கே வாழ்கிறார் கீழக்குயில் குடியில். இப்படியாக இந்த ஊரினதும் ஊரின் புதல்வர்களினதும் பெருமைசால் வரலாறுகளை எழுதிவைக்க நிறையவே உண்டு. நிற்க.

அந்தக் காலத்தில் வளரி அல்லது வளரித்தடி(Bumerang/Boomerang) என்ற ஆயுதமே அவர்களது பிரதான ஆயுமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக் கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு செய்யும் ஆயுத பூசையில் இந்த வளரி காணிக்கையாக்கப்படுகின்றது. அவர்கள் இரகசியமாகப் பூஜிக்கும் ஒரு நிலவறை ஒன்றுக்குச் சென்ற நண்பர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் இன்று வரை தமது முன்னோருக்குக் காணிக்கை செலுத்திய இந்த வளரிகள் பெருங்குவியலாகக் கிடப்பதனையும்; இன்று இந்த ஆயுதம் வழக்கொழிந்து போனதால் அதன் செய்கையில் ஏற்பட்ட உரு மாற்றங்களையும் விபரித்தார்.


கீழக்குயில் குடியைச் சேர்ந்த புலவர் அரிச்சந்திரன். அவர் ஒரு அரிய பொக்கிஷம். ஒரு அற்புதமான கதை சொல்லி..சமண மலையின் பாறைகளில் சொக்கிக் கிடந்தபோது அந்தக் குன்றின் உச்சியில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகின்ற காட்சிகளின் விளிம்புநிலைச் சரிதைகளை விலாவாரியாகச் சொல்வதுமட்டுமல்ல அதன் அரசியலோடு சொல்லும் திறன் பெற்றவர் அவர். கீழக்குடி மக்களின் சமூகஎழுச்சி நாள் இன்றும் அங்கே கொண்டாடப் பெறுகின்றது. சமண மலையின் ஒரு புறத்தில் சமணர் குகை இருக்கின்றது. அதன் வாசலில் மகாவீரர் செதுக்கப்பட்டிருக்கின்றார். மேலே ஏறிச் சென்றால் அங்கே சமணப் பள்ளி இருந்ததற்கான தடயங்கள்; ஒரு கோவில் இருந்தற்கான அடையாளங்கள், மற்றும் நிறைய பாறையிற் செதுக்கிய சமண சிற்பங்கள் இருக்கின்றன. காற்றிலும் மழையிலும் பலநூற்றாண்டுகளாகச் சிதைந்தபடி.
http://www.lankahermes.com/2005_07_01_archive.html


No comments: