srilanka - சாதிய இறுக்கம் இருக்கிறதா?

கேள்வி: இங்கு இருக்கிற அளவுக்கு அங்கு சாதிய இறுக்கம் இருக்கிறதா?
பதில்: இல்லை, உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் இங்கு வந்தபோது எனது நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்த போது, அங்கு அவருடைய நண்பர் என்னைப் பார்த்து முதலாவதாகக் கேட்ட கேள்வி நீங்கள் என்ன சாதி என்று? நானும் தவறுதலாக சொல்லிவிட்டேன். அத்துடன் அவர் எழுந்து போய்ட்டார்.
மலையகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் (80%) தோட்டத் தொழிலாளர்கள் அல்லது தோட்டத்தொழிலை ஒட்டிய வேறு தொழில்களைச் செய்பவர்கள், அல்லது தோட்டங்களிலேயே வாழ்பவர்கள். அந்த வகையில் அவர்கள் தொழிலாளர்கள் என்ற பொதுவான வகையில் அடக்குமுறைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே அவர்கள் வர்க்கம் என்ற நிலையிலே அவர்கள் மத்தியிலே சாதியம் என்பது பெரிய விடயமாக பேசப்படுவதில்லை. இதைவிட மலையக மக்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு பிரதானமாக முகங் கொடுக்க வேண்டி இருப்பதால் சாதிப்பாகுபாடுகள் அங்கு பெரியளவிற்கு எழுச்சியடைவதில்லை. ஆனால் இன்றும்கூட சிறு சிறு சம்பவங்கள் திருமணத்தின்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சம்பவங்கள் நடைபெறுகிறதே ஒழிய பெருமெடுப்பில் சாதியம் என்பது ஒரு பொருட்டாக இல்லை. ஆனாலும் கூட மலையகத்தின் நகர்ப்புறங்களில் குறிப்பாக கண்டி, அட்டன், கொழும்பு பகுதிகளில் வாழக்கூடிய வர்த்தகர்கள் குறிப்பாக இலங்கையில் உழைத்து தமிழ்நாட்டில் சேமிக்கக்கூடிய வர்த்தகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதைப்போன்று சாதிய அமைப்புகளை நிறுவுவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

கேள்வி : எப்படி?
பதில்: சாதி சங்கங்கள் மற்றும் அமைப்புகளை நிறுவுகிறார்கள். உதாரணத்திற்கு ஆறுநாட்டு வேளாளர் சங்கம், பரதர் சங்கம், நாடார் சங்கம் போன்றவற்றை குறிப்பிடலாம். இதுகூட தொழிலாளர்களிடம் பெரும் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில் யாழ்ப்பான சமூகத்திடம் சாதிய முறைமைகளை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தைத் திணிப்பதில் பலர் முன்னின்று செயல்படுகிறார்கள். அதாவது அங்கு பொதுவாக களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது, அவர்களின் சிந்தனைகளை மாற்றக்கூடிய தென் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை அங்கு முழுமையாக அனுமதிப்பது, சாதியத்தை ஊன்றக்கூடிய சம்பவங்களைத் தூண்டிவிடுவது போன்றவை. இவ்வாறு அவர்கள் சமூக சிந்தனைகளை மாற்றக்கூடிய மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாற்றக்கூடிய அனைத்தையும் அரச மட்டத்திலும் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாகவும் செயல்படுத்தி வருகிறார்கள்.
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13775&Itemid=263

No comments: