பெருங்காமநல்லூர் வீர கள்ளச்சி "மாயக்காள்" மற்றும் வீர கள்ளர்களும்

பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். அவன் வழி வந்த பிறமலைக்கள்ளர்கள் கொடிய குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயனை தடுத்து போர் செய்யாது அடித்து பெருங்காமநல்லூரில் போர் (கலகம்) செய்தனர் (தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது இச்சட்டம் பாய்ந்தது ஆனால் இதை எதிர்த்து நின்ற ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே ). கள்ளர் நாட்டு ஊர்ப் பெரியவர்கள் கூடி, ரேகை வைக்கக் கூடாது என்றும், இச்சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்ப்பது என்றும் முடிவு செய்தனர். அதற்காக ரேகை எதிர்ப்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ரேகைப் பதிவிற்கு யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்று ஊர் ஊருக்கு ஓலை விட்டார்கள். இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பி வைத்தனர்.
ஆனால் 1920 ஏப்ரல் 2ஆம் நாள் இரவே சிந்துபட்டி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் படை வந்து குவிந்து விட்டது. ஏப்ரல் 3ஆம் நாள் அதிகாலையில் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்தது.
வட்டாட்சியரும் நீதிபதியும் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏறத்தாழ 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். எங்கும் ஒரே ஆரவாரம். கட்டுக்கடங்காத நிலை.
அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். கல், கம்பு, கத்தி, ஈட்டி, வில் அம்பு, வளைதடி போன்ற ஆயுதங்களோடு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் ரேகைப் பதிவிற்கு ஒத்துழைப்புக் கேட்டனர். அதனை ஏற்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர். கூட்டத்திலே விட்டி பெருமாள்தேவன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி, "அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, மரியாதையா ஊரை விட்டு போய் விடுங்கள், இல்லையென்றால் ஒங்களை வெட்டி காத்தாண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்” என்று எச்சரித்தார்.
கள்ளர் கூட்டத்திலே “ஓவாயன்” என்பவரும் இருந்தார். அவர் கைகளைப் பின்னால் கட்டியிருந்தார். இரண்டு கைகளில் ஒரு கையில் கேழ்வரகு ரொட்டி இருந்தது. மறுகையிலே கல் இருந்தது.
அதிகாரிகளை நோக்கி, "சமாதானம் என்றால் இதோ இந்த ரொட்டியை உனக்குத் தருவேன், சமாதானம் இல்லையென்றால் இந்தக் கல்லைக் கொண்டு உன்னுடைய மண்டையைப் பிளந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.
ஓவாயனைப் போல், விட்டி பெருமாத் தேவரைப் போல் மக்களனைவரும் ஓன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. உதவி தாசில்தார் ஜான் அன்பு நாடார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டான்.
சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர். சண்டையிட்டவர்களுக்குத் பயம் இல்லாமல் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த வீர கள்ளச்சி மாயக்காள் என்ற பெண்ணும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவரைச் சுட்டதுமில்லாமல் துப்பாக்கியினாலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மொத்தம் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெருங்காமநல்லூர் கிராமம். போர்க்களத்தில் ஆயுதமேந்தி எதிரியுடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களின் உயிர்த்தியாகத்தைப் போற்றும்வகையில் அவர்களுக்கு ‘நடுகல்’ நட்டு, ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்துவது பழந்தமிழர் மரபு. அத்தகைய ‘நடுகல்’ ஒன்று பெருங்காமநல்லூரில் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. பெருங்காமநல்லூரில் பலியானவர்கள் தன்மானம் காத்த வீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீரமரணத்தைத் தழுவியவர்கள். உச்சியில் தீச்சுடருடன்கூடிய கருந்தூணாய் உயர்ந்தோங்கி நிற்கும் அந்த ‘நடுகல்’லுக்கு அவ்வூர் மக்கள் தவறாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 3ஆம் தேதி பொங்கல் வைத்து வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள்.
குறிப்புகள் : 1764 ஆம் ஆண்டு ஆங்கிலேய கேப்டன் ரூம்லே வரி கட்ட மறுத்த வெள்ளளூர் நாட்டை சேர்ந்த 5000 கள்ளர்களை இனபடுக்கொலை செய்த வரலாறும் உண்டு.

No comments: