சோழர்கள் கடாரம் மீதும் இலங்கை மீதும் படையெடுக்கவில்லையா? 
இலங்கை மீது சோழர்கள் படையெடுத்தது வரலாறு. நமக்கெல்லாம் தெரியும். ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் படையெடுத்தார்கள் சோழர்கள். இலங்கையில் அனுராதபுரத்தை அவர்கள் தாக்கினார்கள். எந்தப் படையெடுப்பையும் போலவே அதுவும் அழிவைக் கொண்டு வந்தது. உதாரணமாக, அனுராதாபுரத்தில் சோழ வீர்ர்கள் அங்கிருந்த பௌத்த ஆலயங்களைத் தாக்கினார்கள். ஆனால் படையெடுப்புக்குப் பின்னர் ராஜராஜ சோழனின் நடத்தை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். திரிகோணமலை கல்வெட்டுச் செய்திகள், ராஜராஜ சோழன் ஒரு பௌத்த விகாரத்தையும் / மடாலயத்தையும் சீர் செய்து அதற்கு நிலத்தையும் செல்வத்தையும் அளித்த செய்தியைக் கூறுகின்றன. தாங்கள் கடல்கடந்து வென்ற சுமத்ராவின் சைலேந்திர குல அரசர்கள், நாகப்பட்டினத்தில் பௌத்த சூடாமணி விகாரத்தை நிறுவ நிலமும் ஆதரவும் அளித்தது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்தான். மேலும், அவர்களின் கடல்கடந்த சாம்ராஜ்ஜிய உருவாக்கம் வெறும் போர்களால் மட்டுமல்ல; உறுதியான வணிக – கலாசார உறவுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
அதாவது, சோழர்கள் கடல் கடந்து மதச்சூறையாடல்களைச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ மதத்தைப் பரப்பியதாக எந்த க் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.

No comments: